வரலாற்றுப் பெருமைமிக்க புன்னைக்காயலில் செவாலியர் T.R.பிஞ்ஞேயிர, திருமதி.ரொசாரியம்மாள் பர்னாந்து தம்பதியின் தலைமகனாகப் பிறந்தவர் Dr.P.M.ரெக்ஸ் பிஞ்ஞேயிர M.D.T.D.D., F.F.I.M., F.C.C.P., (USA) F.I.C.A (USA) பால பருவத்தில் இலங்கையில் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடி புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் S.S.L.C வரை படித்து பின்னர் சென்னை லொயோலாக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். அதன்பின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்று M.B.B.S பட்டம் பெற்றார். சிறப்பு மருத்துவப் பயிற்சிக்குப் பின்னர் T.D.D (Diploma in Tuberculosis) பட்டம் பெற்றார். மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து M.D. பட்டமும் பெற்றார்.
சென்னை, ஸ்டான்லி மருத்துவ மனையிலே கெளரவ (Honorary) மருத்துவராக பணியாற்றினார். நெஞ்சுநோய்ப் பிரிவில் முதன்மை மருத்துவராக (Chief in Chest Department) ஆக 20 வருடமாக சிறப்புடன் பணியாற்றி, நெஞ்சுநோய், ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் தனிமுத்திரை பதித்து, மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.
சிறப்பு : சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலே பணியாற்றிய போது “Allergy” – என்ற ஆங்கிலப் பதத்திற்கு, “ஒவ்வாமை” எனும் தமிழ்ச் சொல்லைத் தந்த பெருமை – Dr. P.M. ரெக்ஸ் அவர்களைச் சாரும்.
பல மருத்துவ நூல்களை தமிழில் இவர் படைத்துள்ளார்.
அவையாவன :-
1) ”மாரடைப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி?”
2) “உயிருக்கே உலைவைக்கும் போதைப் பழக்கம்” இந்த இரண்டு நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்றன.
3) “டாக்டர் பேசுகிறார்” – தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் பரிசைப் பெற்றது.
4) “மன உளைச்சலை விரட்டுவது எப்படி?” தமிழக அரசின் பரிசையும் பாராட்டுதலையும் பெற்றது.
இவர் 1) அமெரிக்க நெஞ்சு நோய்க்கல்லூரி 2) அனைத்துலகக் குருதி நுட்பக் கல்லூரி, 3) அனைத்திந்திய ஒவ்வாமை நோய்க்கல்லூரி ஆகியவற்றில் சிறப்பு உறுப்பினராக இருந்தார்.
இது தவிர
1. தமிழக அரசு சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவராகவும்
2. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினராகவும் இருந்ததோடு மட்டுமின்றி சமூக சேவையிலும் சமூகத் தொண்டிலும் ஈடுபாடு கொண்ட சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார். சென்னை மாநகரின் Sheriff என்ற கெளரவ பதவியையும் இவர் வகித்தார். மருத்துவத்தில் மட்டுமன்றி தமிழ்க் கவிஞராகவும் மேடைப் பேச்சாளராகவும் இவர் விளங்கினார்.
சொர்ணம்